உத்தரப் பிரதேசத்தில் நடந்த இந்தத் திருமணம், வரதட்சணைக்காகவோ அல்லது குடும்பச் சண்டையாலோ நிற்கவில்லை; ஒரு வளர்ப்பு நாய்க்காக நின்றுபோனதுதான் இப்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அதிகாலை 4 மணி அளவில் திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, அருகே கட்டப்பட்டிருந்த மணப்பெண்ணின் செல்ல நாய் குரைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டாரைச் சேர்ந்த ஒரு இளைஞன், அந்த நாயை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளான்.

​தன் கண் முன்னாலேயே செல்லப் பிராணி அடிபடுவதைக் கண்ட மணப்பெண், ஆவேசமடைந்து திருமணத்தை நிறுத்தினார். “பெற்ற பிள்ளையைப் போல வளர்த்த நாய்க்கே பாதுகாப்பு இல்லாத இடத்தில், எனக்கு எப்படிப் பாதுகாப்பு இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், அந்த இடத்திலேயே திருமணத்தை ரத்து செய்தார். மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவோ கெஞ்சியும், மணப்பெண் தனது முடிவில் உறுதியாக இருந்தார். “விலங்குகளின் வலியை உணராத ஒருவனுடன் வாழ்க்கை தேவையில்லை” என அவர் எடுத்த இந்த அதிரடி முடிவு, விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.