புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள களத்துப்பட்ட அருகே கடந்த 15 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வரும் மாரிமுத்து என்ற நபர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கொடூர தாக்குதல் தற்போது சிசிடிவி காட்சியின் மூலம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினமான அன்று காலை, வழக்கம் போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது நான்கு மர்ம நபர்கள் அங்கு வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் மாரிமுத்து அதனை மறுத்ததால், மர்ம நபர்கள் அவரை தாக்கி, கடையில் இருந்த கொதிக்கும் டீயை அவரது தலைமேல் ஊற்றி கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதில் நான்கு பேர் கூட்டமாக தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து கடையில் இருந்த பிற வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் மாரிமுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்திருந்தாலும், தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மாரிமுத்துவின் மகன், சம்பவ வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “என் தந்தையின் மீது நடந்த இந்த தாக்குதலுக்கு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தற்போது, சம்பவம் தொடர்பாக , போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.