அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மக்கள் அன்றாடம் மரணத்துடன் போராடி வருகின்றனர். இதற்குச் சான்றாக, அஞ்சாவ்  மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர், ஆற்றுக்கு மேலே கட்டப்பட்டிருக்கும் ஒரு இரும்பு வயரில் தங்களை கயிறு மூலம் கட்டிக்கொண்டு, தலைகீழாக ஊர்ந்து சென்று ஆற்றைக் கடக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய வேலைகளுக்காகத் தங்கள் விளைநிலங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தப் பெண்கள், அங்குப் பாலம் இல்லாததால் வேறு வழியின்றி இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

கூடை சுமந்தபடி தங்களை ஒரு கயிறு மூலம் இரும்பு வயரில் இணைத்துக்கொண்டு, மிகவும் எச்சரிக்கையுடன் ஆற்றைக் கடக்கும் இந்தக்காட்சி, பார்ப்பவர்களின் இதயத்தை நிலைகுலைய வைக்கிறது.

இந்த ஆபத்தான சூழலிலும், ஒரு பெண் சிரித்த முகத்துடன், “நாங்கள் ஆபத்தான விளையாட்டுகளில் கலந்துகொள்பவர்கள்” என்று வேடிக்கையாகக் கூறுவது, அவர்களின் துணிச்சலையும், அதே நேரத்தில் அவர்கள் அனுபவிக்கும் அவலத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மழைக்காலங்களில் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது, இவர்களின் நிலைமை இன்னும் மோசமாகிறது. இப்பகுதிக்குச் சாலை அல்லது பாலம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

“>

 

தங்களின் அன்றாட வாழ்க்கைக்காக உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்யும் இப்பெண்களின் மன உறுதி பலரையும் வியக்க வைத்தாலும், தொலைதூரக் கிராமங்களில் நிலவும் இந்த அடிப்படை வசதியின்மையைக் கண்டு நெட்டிசன்கள் அரசாங்கத்தின் மீது தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.