இந்தியாவில் விருந்தினர்களை உபசரிப்பதற்கு என்றுமே ஒரு தனி மதிப்பும் பாசமும் உண்டு. அதற்குச் சான்றாக, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹாரி ஜேகார்ட் என்ற பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர், அமிர்தசரஸில் உள்ள ஒரு கடைக்குச் சென்று தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
பொதுவாக இப்படிச் சொன்னால் மற்றவர்கள் திருப்பி அனுப்பிவிடுவார்கள், ஆனால் அந்தக் கடையின் உரிமையாளரான யுகம் லம்பா என்பவரோ, “அதனால் என்ன சகோதரா, நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள், கவலைப்படாதீர்கள்!” என்று புன்னகையுடன் வரவேற்றுள்ளார்.
அதன்பின், அந்த வெளிநாட்டுப் பயணிக்கு தேநீர் அல்லது காபி வேண்டுமா என்று பாசத்துடன் கேட்ட யுகம் லம்பா, அவரைத் தனது கடையின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த நல்ல வானிலையை ரசிக்க வைத்துள்ளார்.
View this post on Instagram
“>
மேலும், அவருக்கு அமிர்தசரஸின் புகழ்பெற்ற உணவான ‘சோலே குல்ச்சே’ வழங்கி உபசரித்தது மட்டுமன்றி, அவர் கிளம்பும்போது அழகான ஒரு மஃப்ளரையும் அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பியுள்ளார்.
இந்தியர்களின் இந்தத் தலைசிறந்த விருந்தோம்பலையும், தன்னிடம் காட்டிய பாசத்தையும் அந்தப் பயணி வீடியோவாகப் பதிவிட்டு நெகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
