கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோலையூர் கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் உறவினரான சண்முகம் குடும்பத்தினர் குழந்தையை கவனித்து வந்துள்ளனர். வழக்கம்போல மாதம்மாள் குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றார்.

இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதால் சண்முகத்தின் குடும்பத்தினர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.