மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில், உர விநியோக மையத்தில் உதவி வட்டாட்சியர் என்பவர் மாணவி ஒருவரை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியா என்ற அந்த மாணவி, கடந்த இரண்டு மாதங்களாக உரம் கிடைக்காமல் அலைவதாகவும், டோக்கன் கேட்டபோது, பெண் என்பதால் டோக்கன் வழங்க முடியாது என்றும், ஆண்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்றும் அதிகாரி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கேட்டபோது, அதிகாரி தன்னை அறைந்ததாகக் குடியா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஒரு மாதமாக உரம் பற்றாக்குறை நிலவுவதாகவும், நூற்றுக்கணக்கான பெண்கள் அதிகாலை 2 மணி முதல் வரிசையில் நின்று காத்திருந்தும் தினமும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும், 15 லாரிகள் நிரம்பிய உரம் பதுக்கி வைக்கப்பட்டு, சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், இதில் உதவி வட்டாட்சியர் ரிது சின்ஹாய்க்குத் தொடர்பு இருப்பதாகவும், கமிஷன் பெறுவதாகவும் குடியா குற்றம் சாட்டியுள்ளார்.

“>

 

இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களுக்குப் பதிலளித்த உதவி வட்டாட்சியர், மக்கள் அறிவுரைகளைப் பின்பற்றாததால் குழப்பம் நிலவுவதாகவும், கிராம மக்கள் தவறாக நடந்து கொள்வதாகவும், தனது துப்பட்டாவைப் பிடித்து இழுத்ததாகவும், மிக அருகில் வந்து வீடியோ எடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். ஆனால், அங்கிருந்த செய்தியாளர்கள், முறையான ஏற்பாடுகள் ஏன் செய்யப்படவில்லை என்றும், விவசாயிகள் ஏன் உரிய நேரத்தில் உரம் பெறவில்லை என்றும் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்காமல் கேமராவிலிருந்து திரும்பிச் சென்றார்.

இந்த வீடியோ வைரலானதால், கிராம மக்கள் நடவடிக்கை எடுக்கக் கோரிப் போராட்டம் நடத்தி வருவதால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.