ஜப்பானில் இன்று பிற்பகல் ஏற்பட்ட ரிக்டர் 7.4 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, ஜப்பானியத் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் காட்டிய தொழில்முறை அர்ப்பணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக மிகவும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த தொகுப்பாளர்கள், நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை மணி ஒலித்த அடுத்த நொடியே, தங்களது உடல் மொழி மற்றும் குரலை மிகவும் தீவிரமான நிலைக்கு மாற்றிக்கொண்டனர். பேரிடர் காலங்களில் மக்களை எப்படி எச்சரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் உயர்தரப் பயிற்சியே இதற்கு முக்கியக் காரணம்.

​குறிப்பாக, நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டவுடன், “உங்கள் உயிர்தான் மிக முக்கியம்! இப்போதே பாதுகாப்பான இடத்திற்கு ஓடுங்கள்!” என்று அவர்கள் உரத்த குரலில் கத்தியது பார்ப்போரை அதிரவைத்தது. ஜப்பானில் நிலநடுக்கத்தின் தீவிரத்திற்கு ஏற்ப எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், எந்த மாதிரியான முகபாவனைகளை வெளிப்படுத்த வேண்டும் எனச் செய்தியாளர்களுக்குத் தனிப் பயிற்சியே அளிக்கப்படுகிறது. உயிரைக் காக்க வேண்டிய பதற்றமான சூழலிலும், கடமை தவறாமல் மக்களை எச்சரித்த ஜப்பானிய மீடியாவின் இந்தச் செயல் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது.