ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டத்தில் பாம்பு கடித்ததால் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வந்தனா மொண்டல் அந்தப் பெண், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அந்தப் பாம்பைக் கொன்று, அதையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், நிலைமை சீராவதற்கு முன்பே மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

“>

இதனால் வீட்டிற்குச் சென்ற பின் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை அடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தத் திடீர் மரணத்தால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள், மருத்துவமனையில் இருந்த மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களைக் கொடூரமாகத் தாக்கினர்.

மேலும் மருத்துவர்களின் அலட்சியமே கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்திற்குக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிகிச்சை அளித்த மருத்துவர் சித்தார்த் போலா, நோயாளிக்குத் தேவையான அனைத்து அவசர சிகிச்சைகளும் மருந்துகளும் வழங்கப்பட்டதாகவும், சிகிச்சை முடிந்த பின் அவர்களாகவே வீட்டிற்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவமனையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.