டெல்லியைச் சேர்ந்த ‘Elite Marque’ என்ற பிஆர் நிறுவனத்தின் சிஇஓ ரஜத் குரோவர், தனது ஊழியர்களுக்காக அறிவித்த ஒரு அதிரடி சலுகை இணையதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது.
அன்னையர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது நிறுவன ஊழியர்கள் அனைவரும் தங்களது பெற்றோருடன் மூன்று நாட்கள் சுற்றுலா சென்று வர சிறப்பு விடுமுறை அளித்துள்ளார்.
இது வழக்கமான விடுமுறை கணக்கில் வராது என்பது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமில்லாமல், அந்தச் சுற்றுலா செலவுக்காக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 ரூபாயை நிறுவனமே வழங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
“நமக்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த பெற்றோருடன் நேரம் செலவழிக்க ‘ஒரு நாள்’ என நாம் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறோம்; அந்த நாளை இப்போதே உருவாக்குங்கள்” என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கார்ப்பரேட் உலகில் எப்போதும் வேலை, லாபம் என்று ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், ஊழியர்களின் மனநலனையும் குடும்ப உறவுகளையும் மதிக்கும் இந்தச் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. “இது வெறும் போனஸ் கிடையாது, பெற்றோரின் ஆசையைக் கேட்டு நிறைவேற்றக் கிடைத்த ஒரு வாய்ப்பு” என்று ரஜத் குரோவர் கூறியுள்ளார்.
View this post on Instagram
“>
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “இப்படி ஒரு நல்ல மனசு கொண்ட முதலாளி கிடைத்தால் ஊழியர்கள் இன்னும் உற்சாகமாக வேலை செய்வார்களே” எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். பணத்தை விடவும், பெற்றோருடன் சேர்ந்து உருவாக்கும் நினைவுகளே விலைமதிப்பற்றது என்பதை இந்த முயற்சி உலகிற்கு உணர்த்தியுள்ளது.
