ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் புகார் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தி.மு.க அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக பா.ஜ.க சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் கடந்த மாதம் 29-ம் தேதி தி.மு.க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பான திமுக அமைச்சர் கே என் நேருவும், காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே எஸ் இளங்கோவனும் உரையாடியது குறித்த வீடியோவை பா.ஜ.க வெளியிட்டதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வாக்காளர்களுக்கு இரண்டு கிலோ இறைச்சியை திமுகவினர் வழங்கியதாகவும், அதே போல் ரூ.10,000 முதல் ரூ.5000 வரை பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் பா.ஜ.க தொடர்ந்து புகார் அளித்தும் தமிழகத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதான சாகு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனையடுத்து தி.மு.க அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். அதனால் கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையரை கேட்டுக்கொள்கிறேன் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.