மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நள்ளிரவில் தனியார் கேப் ஒன்றில் பயணம் செய்த மூன்று பெண்களிடம், டிரைவர் ஒருவர் நடுவழியில் காரை நிறுத்தி தனது நண்பரையும் ஏற்ற முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

நள்ளிரவு நேரத்தில் மூன்று பெண்கள் தாங்கள் முன்பதிவு செய்த தனியார் கேப் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தனர். பயணம் சாதாரணமாகத் தொடங்கினாலும், சிறிது தூரம் சென்றதும் டிரைவர் திடீரென காரை நிறுத்தினார். பின்னர், வழியில் நிற்கும் தனது நண்பர் ஒருவரை காரில் ஏற்றிக்கொள்ளப் போவதாகவும், அவர் ஒரு கிலோமீட்டர் தூரம் மட்டுமே வருவார் என்பதால் பெண்கள் சற்றே ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், முழு காரையும் தங்களுக்காக மட்டுமே புக் செய்திருக்கும் போது, நள்ளிரவில் முன்பின் தெரியாத ஒரு நபருடன் எப்படி பயணிக்க முடியும் என்று கூறி உடனடியாக மறுப்பு தெரிவித்தனர்.

class=””>

பெண்களின் எதிர்ப்பைக் கண்ட டிரைவர், காரில் சிஎன்ஜி எரிபொருள் குறைவாக இருப்பதாகவும், தனது நண்பரை இப்போது இறக்கிவிடாவிட்டால் பின்னர் தமக்கு சிரமம் ஏற்படும் என்றும் ஒரு விசித்திரமான காரணத்தைக் கூறியுள்ளார். ஆனால், டிரைவரின் எரிபொருள் பிரச்சனைக்கு தங்களால் பொறுப்பேற்க முடியாது என்றும், பாதுகாப்பு தான் தங்களுக்கு முக்கியம் என்றும் பெண்கள் கறாராகக் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர், “விருப்பமில்லை என்றால் காரை விட்டு இறங்கி வேறு கேப் புக் செய்து கொள்ளுங்கள்” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இது பெண்களை மேலும் கோபமடையச் செய்தது.

“நாங்கள் முழுப் பயணத்திற்கும் கட்டணம் செலுத்தும் போது, மற்றொரு நபரை காரில் இலவசமாக ஏற்றிச் செல்ல நாங்கள் ஏன் மறைமுகமாகச் செலவழிக்க வேண்டும்? ஷேரிங் செய்ய வேண்டும் என்றால் நாங்கள் ஆரம்பத்திலேயே அதைத் தேர்வு செய்திருப்போம்” என்று பெண்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். மேலும், காரை விட்டு இறங்கிய டிரைவர், வெளியே நின்ற தனது நண்பருடன் மராத்தியில் பேசுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தும் பெண்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்து, அந்த நபரை காரில் ஏற்ற அனுமதிக்கவில்லை. நள்ளிரவில் பெண்களின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.