திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசபாளையம் பழனியாண்டவர் கோவில் தெருவில் பி.கோதண்டம் என்பவர் வசித்து வந்தார். இவர் அ.ம.மு.க  கட்சியின் மாவட்ட அவை தலைவராக இருந்தார். இவரது மனைவி குமாரி முன்னாள் நகர மன்ற உறுப்பினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கோதண்டராம் வட்டி தொழில் செய்து வந்ததில் பல்வேறு இடங்களில் பணத்தை இழந்த நிலையில் நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன் காரணமாக தினமும் ஆரணி கோர்ட்டுக்கு சென்று வந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி ஆரணியில் இருந்து செய்யாறுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் அதன் பின் காணவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் ஆரணி நகர காவல் நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனமாக இருந்ததாக கூறி அவரது குடும்பத்தினர் சென்னை ஐகோர்ட்டில் அவரை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாத காலமாக கோதண்டம் செல்போனுக்கு தொடர்பு கொண்டு யார் யார்கள் என்ன பேசினார்கள்? என்பது குறித்த விவரங்களை சைபர் கிரைம் பிரிவு மூலமாக போலீசார்  சேகரித்த போது ஆகாரம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் அதிக அளவில் உரையாடிக் கொண்டிருந்ததும், பணம் கொடுக்கல் – வாங்கல் சம்பந்தமாக தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது கடந்த 5-ம் தேதியே கோதண்டம் ஆந்திர மாநிலத்தில் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருப்பதி நீதிமன்றத்தில் கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேர் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சரவணன் மற்றும் அவரது நண்பன் குமரன் மற்றும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் உள்ள கந்தவாடி என்னும் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி கிணற்றில் அடையாளம் தெரியாத ஒரு நபரின் பிணம்  கிடந்துள்ளது. பிணத்தை கைப்பற்றி ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனிப்படைபோலீசார்  கோதண்டத்தின் உறவினர்களை அழைத்துகொண்டு ஆந்திர மாநிலத்திற்கு சென்றுள்ளனர். மேலும் கந்தவாடி பகுதியில் மீட்கப்பட்ட பிணம்  கோதண்டம்தானா? அல்லது கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கோதண்டம் உடல் எந்த பகுதியில் இருக்கிறது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.