ஈரோடு மாவட்டம் பழைய மார்க்கெட் அருகே சிராஜுதீன் (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லைலா பானு என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் அவருடைய மூத்த மகள் மட்டும்  தந்தை வீட்டின் அருகே வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு சென்று விட்டு நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது ஆளில்லாத நேரத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் வைத்திருந்த 20 லட்சம் ரொக்க பணம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதில் சிராஜுதீன் வீடு வாங்குவதற்காக பணத்தை வைத்துள்ளார். வீட்டில் நகை மற்றும் பணம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிராஜுதீன் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் வீட்டிற்கு வந்து சோதனை செய்ததோடு அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் ஆளில்லாத நேரத்தில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.