டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறி தவறான திசையில் காரை ஓட்டி வந்த பெண் ஒருவர், தனது வாகனத்தை பின்னோக்கி எடுக்க மறுத்து பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான அந்தச் சாலையில் எதிரே வந்த வாகனங்களுக்கு வழிவிடாமல் பிடிவாதமாக நின்ற அந்தப் பெண்ணிடம், அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகள் காரை பின்னாடி எடுக்குமாறு பலமுறை கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அதற்கு அவர் “நான் காரை பின்னாடி எடுக்க மாட்டேன்” என்று கத்தியதோடு, தான் ஒரு பெண் என்ற காரணத்தைக் கூறி வாதாடியுள்ளார். இதனால் அந்தப் பகுதியில் நீண்ட நேரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் கடுமையான போக்குவரத்து ஜாம் ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு லாரிக்கு முன்பாக நேருக்கு நேர் காரை நிறுத்திவிட்டு அவர் செய்த இந்த அத்துமீறல், அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது.

“>

இதனால் போக்குவரத்து விதிகளை மதிக்காமல், தவறு செய்த பிறகும் தனது பாலினத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி தப்பிக்க முயன்ற அந்தப் பெண்ணின் பொறுப்பற்ற செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இறுதியில், சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் போக்குவரத்து காவல்துறையினர் தலையிட்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து நெரிசலைச் சீரமைத்தனர். இந்தச் சம்பவம் சாலை விதிகளைப் பின்பற்றுவதிலும், பொறுப்புடன் வாகனம் ஓட்டுவதிலும் இருக்கும் அலட்சியத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.