கடலூர் மாவட்டத்தில் உள்ள நிதிநத்தம் கிராமத்தில் ரகுபதி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சத்யா(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சமித்(10), தஷ்வந்த்(5) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இன்ஜினியரான ரகுபதி வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரகுபதி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து சத்யா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் ரகுபதியை கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் ரகுபதி தனது மனைவியுடன் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதனை அறிந்த சத்யாவின் தந்தை செல்வராஜ், தாய் சுசிலா ஆகியோர் ரகுபதியை தட்டி கேட்டனர்.

இதில் கோபமடைந்த ரகுபதி செங்கல்லால் சுசிலாவை தாக்கியுள்ளார். இதனை பார்த்ததும் செல்வராஜ் கட்டையால் ரகுபதியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த ரகுபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ரகுபதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.