திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மேல வீதியில் மணிவேல்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தொழிலதிபரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே வீட்டில் 35 வயதுடைய பெண் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மணிவேலுக்கு அந்த பெண்ணின் மீது ஆசை ஏற்பட்டது.

இதனையடுத்து வீட்டு உரிமையாளர் குடும்பத்தினருடன் வெளிநாடு சென்ற நேரத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு மணிவேல் அந்த பெண்ணை வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என அழைத்தார். இதனை உண்மை என நம்பிய பெண் அவசர அவசரமாக வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மணிவேல் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்து வெளியே கூறி விடுவார் என்ற அச்சத்தில் பெண்ணின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணிவேலை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மணிவேலுக்கு ஆயுள் தண்டனையும், பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.