பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமம் வள்ளுவர் தெருவில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கலையரசன் மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு சுபலட்சுமி என்ற மனைவியும், 1 1/2 வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கலையரசன் குடும்ப செலவிற்காக சுபலட்சுமிக்கு பணம் கொடுக்காததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 20-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் சுபலட்சுமி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

அதன் பிறகு குடும்பம் நடத்த வருமாறு கலையரசன் தனது மனைவியை அழைத்தார். அதற்கு சுபலட்சுமி மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் கலையரசன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலையரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.