கடலூர் மாவட்டத்தில் உள்ள கெங்கநாயக்கன் குப்பத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விமல்ராஜ் தனியார் செல்போன் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 நாட்களுக்கு முன்பு விமல் ராஜுக்கு ரவீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

நேற்று ரவீனாவுக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக வேலைக்கு சென்று விட்டு சீக்கிரம் வந்து விடுவதாக விமல் ராஜ் கூறினார். இதனையடுத்து திருப்பாதிரிப்புலியூர் தண்டபாணி செட்டி தெருவில் இருக்கும் வீட்டு மாடியில் ஏறி செல்போன் இணையதள சேவைக்காக விமல் ராஜ் கேபிளை சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் கை உரசியதால் மின்சாரம் தாக்கி விமல்ராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு விமல்ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.