கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய பானுஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது மகளை பாஸ்கர் தனியார் கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு டாக்டர் பானு ஸ்ரீயை பரிசோதனை செய்து 2 ஊசிகள் போட்டு மருந்து, மாத்திரைகளை கொடுத்துள்ளார்.

அதன் பிறகும் பானு ஸ்ரீயின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உடலில் கொப்பளம் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் பானுஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த குடும்பத்தினர் காடாம்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது தவறான சிகிச்சை அளித்ததால்தான் பானு ஸ்ரீ இறந்துவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட கிளீனிக் டாக்டரை கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.