கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் சண்முகராஜபுரத்தில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வந்தனர். நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஷாலினி திடீரென காணாமல் போய்விட்டார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் ஷாலினியை கண்டுபிடிக்க இயலவில்லை.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே கோவை வாலாங்குளத்தில் இளம் பெண்ணின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அந்த இளம்பெண் காணாமல் போன ஷாலினி என்பது தெரியவந்தது. அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார். ஷாலினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.