கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் மலுமிச்சம்பட்டியில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் தனது மனைவி, மகள் சக்தி அபிராமி(18), மகன் சக்தி முருகன், உறவினர்களான பராசக்தி, முத்துமாரி, பெரியசாமி, மணிகண்டன் ஆகியோருடன் திருநெல்வேலியில் இருக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூப்பன்பட்டி விலக்கு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஏழு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.