சேலம் மாவட்டத்தில் உள்ள பூனை கரடு பகுதியில் வசிக்கும் அய்யம்பெருமாளின் வீட்டில் கடந்த வாரம் ஒரு தம்பதியினர் வாடகைக்கு குடிவந்தனர். நேற்று முன்தினம் மதுபோதையில் அவர்களது வீட்டிற்கு ஒரு வாலிபர் வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும் வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு வந்த அய்யம்பெருமாள் சீக்கிரம் வீட்டை காலி செய்யுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார்.

நேற்று காலை அந்த வீட்டின் மொட்டை மாடியில் வாலிபர் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான தம்பதியினரை தேடி வருகின்றனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தலைமறைவானவர்கள் திருச்சியை சேர்ந்த பாலமுருகன்-வரலட்சுமி தம்பதியினர் என்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர் துறையூர் ஆலந்துடையான்பட்டி பகுதியைச் சேர்ந்த தியாகு(24). அவருக்கு பிரியா என்ற மனைவியும், மூன்று வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தியாகு வந்துள்ளார். அவர் எதற்காக சேலத்திற்கு வந்தார்? தம்பதியினருக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.