அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக கும்பகோணத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில் தனது தந்தையை பார்ப்பதற்காக செல்வம் கும்பகோணத்தில் இருந்து சாத்தம்பாடி நோக்கி மொபட்டில் சென்றுள்ளார்.

அப்போது ஸ்ரீபுரந்தான் அருகே வளைவு பகுதியில் திரும்ப முயன்ற போது எதிரே கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்வம் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று செல்வத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.