கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் புதுப்பேட்டையில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேற்பார்வையாளரான செந்தமிழன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று செந்தமிழன் மோட்டார் சைக்கிளில் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வயலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செந்தமிழன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த பூபதி(65) என்ற மூதாட்டியும் காயமடைந்தார். அவரை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்தில் உயிரிழந்த செந்தமிழனின் தாய் தில்லை கடலூர் மாவட்ட பா.ம.க மகளிர் அணி துணை செயலாளராக இருக்கிறார். நேற்று தில்லைக்கு பிறந்தநாள் ஆகும். அந்த நாளில் மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.