திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்து கோட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவரும் இவரது நண்பர் உமாபதியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் பி.எப் பணத்தை வாங்குவதற்காக நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உமாபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் உமாபதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.