திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் பிரகாஷ் சொந்தமாக ஒரு கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பிரகாஷ் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரிடம் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். இரண்டு வருட காலமாக பிரகாஷ் வட்டி கொடுத்து வந்துள்ளார். தற்போது அசலும், வட்டியும் சேர்த்து ராஜா 2 லட்ச ரூபாய் கேட்டு ரவுடிகளை வைத்து மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் ஏழுகண் பாலத்திற்கு சென்றுள்ளார். பின்னர் கந்துவட்டி பிரச்சனை குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் ஒரு வீடியோவை செல்போனில் பதிவிட்டு நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் காரில் அமர்ந்து விஷம் குடித்தனர். இதுகுறித்து அறிந்த நண்பர்கள் பிரகாஷையும், சரிதாவையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் உயிரிழந்தார். சரிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.