திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டு ராஜகாபட்டி காளியம்மன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு காளியம்மாள் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காளியம்மாள் அங்கன்வாடி திறப்பதற்காக கதவை திறந்தார்.

அப்போது உள்ளே இருந்து வந்த கட்டு விரியன் பாம்பு காளியம்மாளின் கையில் கடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காளியம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.