திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் கட்டபொம்மன் தெருவில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு பாலகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாள் தனது கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் திசையன்விளை நோக்கி சென்றார். பின்னர் காயத்திற்கு கட்டு போட்டுவிட்டு தாய், மகன் இருவரும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் வாழைத்தோட்டம் விலக்கு அருகே சென்ற போது இசக்கியம்மாளின் சேலை எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்புற சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த இசக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.