சென்னை மாவட்டத்தில் உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்தியவாணி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னை புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஆனால் வீட்டில் புழுக்கமாக இருந்ததால் சத்தியமானி மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கியுள்ளார்.

இவரது பக்கத்து வீட்டில் இருக்கும் சரவணனின் வீட்டு சுற்றுச்சுவரில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்தது. மேலும் மழை பெய்ததால் ஈரமாக இருந்த சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து சத்தியவாணி மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த சத்தியவாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு நேரம் என்பதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கன்னியப்பனுக்கு இது தெரியவில்லை.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் சத்தியவாணி இறங்கி வராததால் சந்தேகமடைந்த கன்னியப்பன் மாடிக்கு சென்ற போது தனது மனைவி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சத்தியவாணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.