திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான நீலமேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயின் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார். வழக்கமாக நீலமேகம் ஏந்தலில் இருந்து சின்னாறு வரைக்கும் நடந்து சென்று காவல் பணியை மேற்கொள்வார். நேற்று வழக்கம் போல காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நீலமேகத்தை விஷ வண்டுகள் கடித்தது.

இதுகுறித்து அவர் உளுந்தூர்பேட்டையில் இருக்கும் அலுவலகத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற சக பணியாளர்கள் நீல மேகத்தை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நீலமேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.