கடலூர் மாவட்டத்தில் உள்ள சி புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவரது மருமகன் இளைய குமார் அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு லட்ச ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இளையகுமார் வட்டி பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து குப்பன் இளைய குமாரின் மனைவி சுமதியிடம் கேட்டுள்ளார். மேலும் அவர் செல்போன் மூலம் சுமதியை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் அவரை திட்டியதாக தெரிகிறது.

இதனை சுமதி தனது தாய் தனலட்சுமியிடம் தெரிவித்து அழுதார். இதனை கேட்டு கோபமடைந்த தனலட்சுமி தனது வீட்டில் வழியாக சென்ற குப்பனிடம் தட்டி கேட்டபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த குப்பன் தனலட்சுமியை கீழே தள்ளிவிட்டார். இதனால் மயங்கி விழுந்த தனலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.