கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிய கோஷ்டி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் குமார் பரங்கிப்பேட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார். அப்போது கண்டக்டராக பணியில் இருந்த கார்த்திக்கிடம் குமார் பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்து டிக்கெட் கேட்டார். ஆனால் கார்த்திக் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என கூறி அதனை வாங்க மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் பேருந்து பரங்கிப்பேட்டை அகரம் ரெயிலடி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது கார்த்திக்கும், டிரைவர் ரவியும் இணைந்து குமாரை சரமாரியாக திட்டி தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.