ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்திலுள்ள குருகிராம் என்ற பகுதியில் துரியோதன ராவ் (28)- பார்வதி (22) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இதில் ராய் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் பார்வதி கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இவர்கள் இருவரும் இரவு உணவு சமைத்து முடித்த பின் குளிர்ந்த காற்றை அனுபவிப்பதற்காக இரவு 10:30 மணிக்கு வீட்டின் மேல் மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, பார்வதி மொட்டை மாடி சுவரின் விளிம்பில் ஏறி இருபுறமும் கால் தொங்கியவாறு அமர்ந்தபடி ராயிடம் “நான் கீழே விழுந்தால்…. நீ என்னை காப்பாற்றுவாயா? என்று விளையாட்டாக கேட்டுள்ளார்.

அதற்கு ராய் “நீ கீழே இறங்குவாயா?” என்று சொல்லிக்கொண்டே அவரை பிடிக்க முற்பட்டார். ஆனால் பார்வதி நிலை தடுமாறியதால் ராய் அவரை தனது கையில் பிடித்து மேலே இழுக்க முயன்றார். அவர்கள் இருவரும் சத்தமிட்ட போதும் யாரும் வரவில்லை. 2 நிமிடங்கள் பார்வதியை ராய் இழுக்க முயன்றும் எதிர்பாராத விதமாக கையில் இருந்து தவறிய பார்வதி கீழே விழுந்து விட்டார். உடனடியாக ராவ் பார்வதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பலத்த உள் காயங்கள் ஏற்பட்டதால் செல்லும் வழியிலேயே பார்வதி உயிரிழந்து விட்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், கணவரின் உடலில் காயங்கள் இருந்ததன் மூலம் அவர் மனைவியை காப்பாற்ற முற்பட்டதை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு பார்வதியின் குடும்பத்தினரும் தங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.