ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர் ஆகிய பகுதிகளில் ஒற்றை யானை உலா வருகிறது. நேற்று மாலை ஒற்றை யானை கடம்பூர் அருகே நடந்து சென்றது. மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை துரத்தியது. ஒருவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது யானை துரத்தி வருவதை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் ஓடினர். இதில் கோபமடைந்த யானை மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது. நீண்ட நேரமாக சாலையில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.