ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சென்டர்தொட்டி கிராமத்திற்குள் நுழைந்து விவசாயியான குரு என்பவரது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து யானை சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகளை நாசம் செய்தது. இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் யானையை விரட்ட முயன்றனர்.

ஆனால் யானை அவர்களை துரத்தி சென்றதால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை தானாக காட்டுக்குள் சென்றது. யானை சுமார் 1/2 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்களை நாசப்படுத்தியது. எனவே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.