நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சீதாராம் பாளையம் சக்திவேல் நகரில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனசேகர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனசேகருக்கு திருமணம் செய்வது தொடர்பாக ஜோதிடரை பார்ப்பதற்காக தந்தை, மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தாடுக்கு சென்றனர். அங்கு ஜாதகம் பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பவானியை அடுத்த லட்சுமி நகர் காவிரி ஆற்றுப்பாலம் அருகே வைத்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை தனசேகர் முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த தனசேகரும், ஞானபிரகாசமும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தந்தை மற்றும் மகனின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.