ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம விலங்கு சக்திவேலுக்கு சொந்தமான 8 செம்மறி ஆடுகளை கடித்து கொன்றது.

இதனையடுத்து மாடுகளின் சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் குடல் சரிந்து ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மர்ம விலங்கின் கால் தடயங்களை ஆய்வு செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.