திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நாலுமுக்கு, மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஜெஸ்சி(55) என்பவர் நாலு மூக்கு தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்த சிறுத்தை அவரை பாய்ந்து தாக்கியது. உடனடியாக அலறி சத்தம் போட்டபடி ஜெஸ்சி ஓடியதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சத்தம் எழுப்பினர்.

இதனால் சிறுத்தை அங்கிருந்து தப்பித்து சென்றது. இதனையடுத்து பொதுமக்கள் ஜெஸ்சியை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மாஞ்சோலை பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளும், தொழிலாளர்களும் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.