தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எதற்காக பதற்றத்துடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலையைப் பிடிக்கவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் வெளிப்படையாக கூறிவிட்டு எங்கள் கட்சியில் இணைந்துள்ளார்கள். நாங்கள் சேர்க்கவில்லை என்றால் திமுகவில் இணைந்திருப்பார்கள். எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறியவர் அண்ணாமலை. அப்படிப்பட்டவர் ஏன் இன்று பதற்றம் அடைய வேண்டும்.

அண்ணாமலை ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஆற்றுவோம் என்று கூறியுள்ளார். ஆனால் அண்ணாமலை உண்மையில் எதிர்வினை ஆற்ற வேண்டிய இடம் திமுக தான். சிலர் கோவில்பட்டியில் அரைவேக்காட்டுத்தனமான செயலை செய்துள்ளார்கள். இதற்கு அண்ணாமலை முதலில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒருவேளை அண்ணாமலை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர் அரசியலில் இன்னும் பக்குவப்படவில்லை என்று தான் கூற வேண்டும். மேலும் அண்ணாமலைக்கு எதற்காக இந்த பயம் மற்றும் பதற்றம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.