தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன்பின் சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அதோடு சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர். அதனை தொடர்ந்து பாஜக-அதிமுக மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்நிலையில் கல் வீசியவுடன் உடைவதற்கு அதிமுக கண்ணாடி அல்ல, சமுத்திரம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நிர்வாகிகள் கட்சி மாறுவது இயல்பானது. இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அண்ணாமலையிடம் இல்லை. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால் தாங்க முடியாது என்று அவர் கூறினார்.