கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரும், அவரது மனைவியும் அங்கிருந்த இஸ்லாமிய குடியிருப்பாளர் ஒருவரைப் பார்த்து “தீவிரவாதி” என்றும், “பாகிஸ்தானி” என்றும் இழிவாகப் பேசியுள்ளனர்.

இந்தக் கொடூரமான வார்த்தைகளைக் கேட்டதும் அங்கிருந்த மற்ற குடியிருப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். அந்தத் தம்பதியைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்கள், “யாரைப் பார்த்துத் தீவிரவாதி என்று சொல்கிறீர்கள்? இந்தியா அனைத்து மதத்தினருக்கும் சொந்தமான நாடு” என்று ஆவேசமாகத் தட்டிக் கேட்டனர்.

 

“யார் உங்களை இப்படிப் பேசச் சொன்னது?” என்று அவர்கள் முன்வைத்த சரமாரி கேள்விகளால் அந்தத் தம்பதி நிலைகுலைந்து போனார்கள். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி, தாங்கள் பேசிய வார்த்தைகளுக்காக அங்கேயே பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு விட்டுச் சென்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வெறுப்புப் பேச்சுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தது பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.