தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 1700-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 10,000 மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

நேற்று காலை 200 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. எந்த நேரத்திலும் கடல் சீற்றம் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர். கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும், கடல் சீற்றமாக காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுதிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.