கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான இடம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூரில் இருக்கிறது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்ற ராமகிருஷ்ணன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து கையெழுத்து பெறுவது தொடர்பாக ராமகிருஷ்ணன் அகரம்சீகூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷை அணுகியுள்ளார்.

அப்போது பிரகாஷ் 2500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ராமகிருஷ்ணன் ரசாயனம் தழுவிய ரூபாய் நோட்டுகளை பிரகாஷிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரகாஷை கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.