செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33 இடங்களில் மிக கனமழையும்,  12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் இரண்டு தினங்களை பொறுத்தவரை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கனமழைக்கான எச்சரிக்கையை  பொறுத்தவரை அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ஏற்கனவே தரப்பட்ட சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) தொடர்கிறது.

மேலும் விருதுநகர்,  தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும்,  நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் ராமநாதபுரத்தில் ஓரிரு  இடங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில்  கன மழைக்கான வாய்ப்புள்ளது.