சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் 20 பேர் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை கார்த்திகேயன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகேயனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.