தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாந்தா கோட்டை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இங்கு நெல் கொள்முதல் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் விளைவித்த நெல்மணிகளை விற்பதற்காக கொள்முதல் நிலையத்திற்கு வாகனங்களில் கொண்டு வந்த விவசாயிகள் உடனுக்குடன் நெல்லை விற்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் நெல்மணிகளை ஆங்காங்கே குவித்து வைத்து தார்ப்பாய் போட்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் கொண்டு வருவதை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் பார்வையிட்டு அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது குறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது, இந்த கொள்முதல் நிலையத்தை சுற்றியுள்ள முதல் சேண்டாக் கோட்டை, மாளியக் காடு, பள்ளிகொண்டான், காசாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளையக்கூடிய நெல்மணிகளை விவசாயிகள் கொண்டு வந்து இந்த கொள்முதல் நிலையத்தில் கொடுக்கின்றனர். ஆனால் கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் பிடித்த நெல் மூட்டைகள் அடுக்கடுக்காக இங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. கொள்முதல் மூட்டைகளை நெல் மூட்டைகளை வைக்க இடம் இல்லாததால் தற்போது குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் நாங்கள் கொண்டு வந்த நெல்மணிகளை அப்படியே கொட்டி வைத்து தார்ப்பாய்களை போட்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றோம். மேலும் திடீரென கோடை மழை பெய்தால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்மணிகள் முளைத்து விடும் அபாயம் இருக்கிறது. அதனால் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.