ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை விதிகளை விளக்கி கூறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி தலைமை தாங்கியுள்ளார். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது முன்னிலை வகித்து, வாகன ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் முகமது கூறியதாவது, தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் அனுமதி பெற்ற பள்ளி வாகனத்தில் மட்டும் தான் வருகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதனையடுத்து உடற்கல்வி ஆசிரியர் மூலம் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். பள்ளி வாகனங்களில் பேருந்துகளில் தொங்கியபடி வரக்கூடாது என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இந்நிலையில் 18 வயது உட்பட்டவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் கிடையாது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்க கூடாது. அப்படி பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யலாம். பள்ளி வாகனங்களின் உட்புறம் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தி, இருக்கைகளுக்கு மேல் மாணவ, மாணவிகளை எந்த காரணத்தை கொண்டும் ஏற்றி செல்லக்கூடாது என பேசினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டு சாலை விதிகள் குறித்து சந்தேகங்களை கேட்டறிந்து பயனடைந்தனர்.