நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோடை கால விடுமுறையை முன்னிட்டு வரும் நாட்களில் மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதி கிடையாது. எனவே பாரத் பவன் ரோடு- ரயில்வே ஸ்டேஷன் ரோடு- சிவம் தியேட்டர் சக்கரவர்த்தி ஜங்ஷன் வழியாக நீலகிரி செல்ல வேண்டும். இதே போல் நீலகிரியில் இருந்து கோத்தகிரி வழித்தடத்தில் வரும் வாகனங்கள் ராமசாமி நகர்-பாலப்பட்டி-வேடர் காலனி- சிறுமுகை ரோடு-ஆலாங்கொம்பு ஜங்ஷன்-தென் திருப்பதி நான்கு ரோடு-அன்னூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அவ்வழியாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லலாம். நீலகிரியில் இருந்து குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் பெரிய பள்ளிவாசல்-சந்தை கடை- மோத்தைபாளையம்- சிறுமுகை ரோடு-ஆலாங்கொம்பு- தென்திருப்பதி நான்கு ரோடு சந்திப்பு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

குறிப்பாக மேட்டுப்பாளையம்- சிறுமுகை இடையே ஒரு வழி பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தியமங்கலம் பண்ணாரி- ஈரோட்டில் இருந்து சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல விரும்புபவர்கள் ஆலாங்கொம்பு- தென்திருப்பதி நான்கு ரோடு-அன்னூர் சாலை வழியாக செல்லலாம். மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.