தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நிறுவன முதல்வர் மரிய செசிலி தலைமையில் சாரணியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் விரிவுரையாளர் நீலாவதி வரவேற்க, நிறுவன செயலாளர் நாராயண ராஜன் வாழ்த்தி பேசினார். இதற்கு சிறப்பு விருந்தினராக தேசிய சாரண பயிற்சியாளர் சங்கர ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசியதாவது, ”மாணவர்கள் மனிதநேயத்தோடு பிறருக்கு உதவி செய்து, நாட்டுப்பற்றோடு தேசத் தொண்டாற்றவும் தயாராக இருத்தல் வேண்டும்.

அதற்காக சாரணிய பயிற்சி பெற்று பயன்பெற வேண்டும்” என்று கூறி, சாரணருக்குரிய வணக்கம் முறைகள், கைத்தட்டலின் பல்வேறு முறைகள் மற்றும் உறுதிமொழி போன்ற பல்வேறு செயல்பாடுகளை கற்றுக் கொடுத்தார். மேலும் கயிறுகளில் முடிச்சு போடுதல், கை ஒடிந்தவருக்கு கட்டுப்போடும் முறை, நடக்க இயலாதோரை எடுத்து செல்ல படுக்கை அமைக்கும் முறை, கூடாரம் அமைக்கும் முறை, கிணற்றில் விழுந்தவர்களை தூக்கி எடுக்கும் முறை, பல்வேறு தொப்பிகளை தயாரிக்கும் முறைகள் பற்றி செயல்விளக்க பயிற்சியும் அளித்தார்.