பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருந்ததாவது, விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக துணைச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடி பேச்சு நடத்த சென்றுள்ளார். அப்போது அவர் காருக்குள் இருந்தபடியே மக்களிடம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காரை விட்டு இறங்கி வர மாட்டீங்களா? எனக் கூறி அமைச்சர் மீது சேற்றை வீசியுள்ளனர். அளவுக்கு அதிகமாக மழை பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சில இடங்களுக்கு செல்கின்றனர்.
அங்கு வீடியோ மற்றும் படம் எடுத்து விளம்பரத்திற்காக மக்களை ஏமாற்றுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர், அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் அமைச்சர் மீதான சேறு வீச்சு. மூன்றரை ஆண்டு கால திமுக அரசுக்கு பொதுமக்கள் வழங்கிய சான்றிதழ் தான். இது மக்களை மதிக்க வேண்டும், குடிநீருக்காக போராடும் மக்களிடம் காருக்குள்ளே இருந்து மகாராஜா மனப்பான்மையிலிருந்து திமுக அமைச்சர்கள் வெளியே வர வேண்டும். தமிழ்நாடு மக்களின் இந்த கோபம் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிரொளிக்கும். திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று கூறினார்.